Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் - மத்திய...

பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் – மத்திய அரசு வழக்கறிஞர்

டெல்லி

பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வது பற்றி ஆளுநர் நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் இருக்கும்

பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. அந்த நிலைப்பாட்டினை மத்திய அரசு இன்று மாற்றிக்கொண்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி மாநில அரசு தமக்குள்ள 161-வது பிரிவு அதிகாரத்தின் கீழ் 7 பேரை விடுதலை செய்ய முடியும். இருந்தபோதும் மத்திய அரசு, அப்படி எல்லாம் அதிகாரம் இல்லை என்கிறது. மத்திய அரசின் இந்த முட்டுக்கட்டை வாதத்துக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது.

அப்போது மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி குடியரசுத்தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி யார் முடிவெடுக்க வேண்டும் என்ற சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று நடந்த விசாரணையின்போது இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குப் பதிலாக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் 3 அல்லது 4 நாள்களுக்குள் ஆளுநர் முடிவெடுப்பார் என்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில், அதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதுதொடர்பாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருக்கிறார். இந்தநிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியிருக்கிறது. மத்திய அரசு தரப்பின் வாதத்தை அடுத்து பேரறிவாளன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments