Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்இலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல் - சமாதானம் செய்த பின்...

இலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல் – சமாதானம் செய்த பின் உடல் அடக்கம்

கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின், மேசியா ஆகிய 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி படகு மூழ்கி அவர்கள் நால்வரும் இறந்ததாக கூறப்பட்டது.

அந்த மீனவர்களின் உடலை மீட்ட இலங்கை கடற்படை ஊர்காவல் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையின், காங்கேசன் துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடலோர காவல்படை கப்பலில் அந்த உடல்கள் கொண்டுவரப்பட்டு இந்திய இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படை வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய கடலோரக் காவல்படை கப்பலில் இருந்த அந்த உடல்களை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி படகில் சென்று பெற்று கரைக்கு கொண்டுவந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில்அந்த உடல்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இராமநாதபுரம் மாவட்ட எல்லைக்கு கொண்டு வரப்பட்ட 4 உடல்களுக்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முதலில் செந்தில்குமார், நாகராஜன், சாம்சன் டார்வின் ஆகிய மூவரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

தங்கச்சிமடம் மீனவர் மேசியா உடலை பெற மறுத்த தங்கச்சி மடத்தில் உள்ள அவரது உறவினர்கள் மேசியாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறியும், மீண்டும் அந்த உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் செய்தனர். மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இந்நிலையில் போலீஸ் அதிகாரிகள் மீனவர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னா் தங்கச்சிமடத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மேசியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments