கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் தற்போதுவரை 300க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை நேற்று முன்தினம் 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 316 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
னமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
அதேபோல நிலச்சரிவில் பள்ளி மாணவர்கள் 27 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வயநாடு முண்டக்கை, வெள்ளரிமலை கிராம நிலச்சரிவில் 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் மற்றும் 76 பெண்கள் இறந்துள்ளனர். மேலும் 23 மாணவர்களை காணவில்லை என கேரள பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எனவே காணாமல் போன மாணவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.