சென்னை
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996- 2001 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அந்த காலகட்டத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடிக்கு எதிரான வழக்கை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.