முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு காலமானார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் மன்மோகன் சிங் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங் உடலுக்கு இன்று யமுனை நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.