டெல்லி தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்கள், விமர்சனங்களை எதிர்கொண்டதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை முன்வைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக நிறுத்தி வைத்திருந்தார்; மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்தார். அப்படி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் 2-வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிய போதும் அவர் ஒப்புதல் தரவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. ஆளுநர்கள் என்பவர்கள் தனிப்பட்ட அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள்தான். அரசியல் வாதிகளைப் போல ஆளுநர்கள் நடந்து கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் நிற்காமல், இந்திய வரலாற்றில் முதல் முறையாக, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்; ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் செல்லாது எனவும் அறிவித்தது உச்சநீதிமன்றம். மேலும் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒப்புதலும் தந்தது.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் கடிவாளம் போட்டிருக்கக் கூடியது. இதனால் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்று வருகின்றனர்.