சென்னை
தமிழ்நாட்டில் இந்த மே மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாகத் தமிழ்நாட்டில் கோடைக் காலத்தில் வெப்பம் படுத்தி எடுக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வெப்பம் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே மாநிலத்தில் பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையிலேயே கூட பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழை பெய்திருந்தது.
அடுத்து இப்போது பருவமழை சீசனும் சீக்கிரமே தொடங்கிவிட்டது. இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலும் மழை ஆரம்பித்துவிட்டது. தமிழகத்திலும் கூட பரவலான இடங்களில் மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை (மலையை ஒட்டியுள்ள பகுதிகள்), கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.