மே 22, வியாழனன்று, கென்யாவின் மேற்கு மலைப்பகுதிகளில் உள்ள எல்கியோ மரக்வெம் கவுண்டியில் உள்ள காக்பிகென் கிராமத்தில் அருட்தந்தை அலாய்ஸ் செருயோட் பெட் அவர்கள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், அவரது கொலை தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் மே 15, வியாழனன்று, இக்வாமிட்டியில் உள்ள தூய லூயிஸ் பங்குத் தளத்தின் அருட்தந்தை ஜான் நெக்வா மைனா அவர்களும், பணத்திற்காகத் திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், தனது பங்கிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகுரு-நைரோபி நெடுஞ்சாலையின் ஓரத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்தார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை ஜான் நெக்வா மைனா அவர்கள், குற்றப் புலனாய்வு இயக்குநர் அலுவலகத்தின் கூற்றுப்படி, கடந்த ஏப்ரல் 27, ஞாயிறன்று, கோவிலில் நிகழ்ந்த ஒரு வழிபாட்டின் போது, முன்னாள் துணைத் தலைவர் ரிகாதி கச்சாகுவாவிடமிருந்து அவர் பெற்ற நன்கொடையின் ஒரு பகுதியைத் தர வேண்டுமென்று திருடர்களால் அச்சுறுத்தப்பட்ட நிலையில், இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்றும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அருட்தந்தை மைனாவின் மரணம் குறித்த விசாரணையை புலனாய்வாளர்கள் முடித்தவுடன், அவர் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணத்தை நாம் அறிந்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார் நியாஹுருருவின் ஆயர் ஜோசப் நெம்பு மப்த்தியா.
கொலை செய்யப்பட்ட அருட்தந்தை மைனாவின் இறுதிச் சடங்கு மே 22, வியாழனன்று, நந்தரூவா கவுண்டியின் ஓல் ஜோரோ ஓரோக்கில் உள்ள தாபோர் மலையில் உள்ள கத்தோலிக்க அருள்தந்தையர் கல்லறையில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.