குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டனுக்கு மதியம் 1.39 விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் இதுவரை 204 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த கோர விபத்தில் இருந்து ஒரு பயணி மட்டும் உயிரோடு தப்பியுள்ளார். அதன்படி இருக்கை எண் 11 ஏ – வில் பயணம் செய்த விஸ்வாஷ் குமார் என்பவர் உயிர் தப்பியுள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ்.மாலிக் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஷ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரை பார்க்க இந்தியா வந்துள்ளார். தனது சகோதரர் அஜய் குமார் உடன் அவர் லண்டன் திரும்பும்போது விமான விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்ட நிலையில், 11A என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஷ் குமார் உயிர் தப்பியுள்ளார்.
மேலும் விமானம் புறப்பட்ட 30 நொடிகளில் பயங்கர சத்தம் கேட்டதாகவும், சில நொடிகளில் அனைத்தும் நடந்துவிட்டதாகவும் உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், படுகாயம் அடைந்துள்ள விஸ்வாஷ் குமார் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உயிர் தப்பிய விஷ்வாஷ் கூறுகையில், “விபத்தில் நான் உயிர் தப்பி எழுந்து பார்த்தபோது, என்னைச் சுற்றி சடலங்கள் இருந்தன. நான் பயந்து எழுந்தேன். என்னைச் சுற்றி விமானத்தின் உடைந்த பாகங்கள் சிதறி கிடந்தன. பின்னர் பாதுகாப்பு படையினர் என்னைப் மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள். எனது சகோதரர் அஜய் என்னுடன் தான் பயணித்தார். ஆனால் அவர் வேறு வரிசை சீட்டில் அமர்ந்திருந்தார். அவர் என்ன ஆனார் என்பது குறித்து எனக்கு இன்னும் விவரம் தெரியவில்லை” என்று கூறினார். மேலும் விஷ்வாஷ், கடந்த 20 வருடங்களாக லண்டனில் வசித்து வருவதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தையும் லண்டனில் வசிப்பதாகவும் கூறினார்.