மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது “எக்ஸ்” வலைத்தள பக்கத்தில் கூறுகையில், ரூ.3000க்கு “பாஸ்டேக்” அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ், வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த திட்டப்படி வணிகம் அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள், இந்த 3000 ரூபாயை பாஸை பெற்றுக்கொள்ளலாம். இந்த பாஸை “ஆக்டிவேட்” செய்த தேதியில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது 200 முறை பயணம் செய்வதற்கோ, எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை “ஆக்டிவேட்” செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் “ராஜ்மார்க் யாத்ரா” என்ற ஆப்பை பயன்படுத்தலாம். இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விரைவில் “லிங்க்” வெளியிடப்பட உள்ளது.
இந்த 3000 ரூபாய் பாஸ் திட்டம் காரணமாக 60 கி.மீ. தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. காத்திருப்பு நேரம் குறையும். நெரிசல் குறையும். லட்சக்கணக்கான தனிநபர் பயன்பாட்டு வாகன உரிமையாளர்களுக்கு விரைவான, சுமூகமான பயண அனுபவத்தை அளிக்கும் என்று கூறியுள்ளார்.