சிவகங்கை
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணமடைந்த வழக்கில், அவரை போலீஸார் தாக்கியதை மறைந்திருந்து வீடியோ எடுத்த அவருடைய நண்பர் சத்தீஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீஸார் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிய சம்பவத்தை அவருடைய நண்பர் சத்தீஸ்வரன் வீடியோவாக எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த வீடியோ இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவும் என நம்பப்படுகிறது. அதுபோல், அஜித் குமாரை அழைத்து வந்ததும் என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருந்த சில விசாரணைக் கைதிகள் சாட்சி அளித்துள்ளனர்.
இந்த நிலையில், சத்தீஸ்வரனுக்கும் அந்த சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாததால் சத்தீஸ்வரன், தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் பேரில், தென் மண்டல ஐ.ஜி. உத்தரவின்படி, ராமநாதபுரத்தில் இருந்து இரு ஆயுதமேந்திய போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.