கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று நிகழ்ந்த ரயில் விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெரும் விபத்துக்கு அப்பகுதியில் இருந்த கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூட மறந்து தூங்கியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ரயில்வே கேட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா என்ற நபர் பணியில் இருந்ததால் மொழி பிரச்சனை என்றும் ஒரு பக்கம் பேசப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் அப்பகுதியில் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாக வேன் ஓட்டுநர், கேட் கீப்பர், ரயில் ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த இரண்டு மாணவர் மற்றும் வேன் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில், சாருமதி (16), விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.