நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் புலி ஒன்று அடித்து கொன்றது. அத்துடன் விடாமல், ஒருவரின் தலையை தின்றும் உள்ளது.
இந்த புலியை பிடிக்கும் பணி 10ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் மற்றும் அதிரடிப் படை 120 பேர் 20 குழுக்களாக பிரிந்து, காட்டுக்குள் சென்ற புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவையிலிருந்து சிறப்பு பாதுகாப்பு படையினரும் தேடும் பணியில் ஈடுபட வந்துள்ளனர். எனினும் புலியின் இருப்பிடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில் முதுமலை சாலையில் புலியை கண்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தகவல் தெரித்துள்ளனர். மேலும், 2 நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்து கொண்டிருந்த மங்கள பகவன் என்பவரை கொன்ற அதே இடத்தில், புலியின் உறுமல் சத்தம் கேட்டதாகவும், கால் தடங்களை கண்டு உள்ளதாகவும் ஆடு மேய்த்தலில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடும் பணிக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சீனிவாசன், உதயன் ஆகிய கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும், நாட்டு நாய் அதவை மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மோப்ப நாய் ராணா ஆகிய நாய்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் புலியை கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, புலியை தேடும் பணியை ஆய்வு செய்த தமிழக வன உயிரின முதன்மை வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், “புலியை உயிருடன் பிடிப்பதுதான் வனத்துறையின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.