Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்அருந்ததியினர் பற்றிய சர்ச்சை.. 24 மணி நேரத்தில் சீமான் விளக்கமளிப்பார் - நாதக வேட்பாளர் மேனகா

அருந்ததியினர் பற்றிய சர்ச்சை.. 24 மணி நேரத்தில் சீமான் விளக்கமளிப்பார் – நாதக வேட்பாளர் மேனகா

ஈரோடு

அருந்ததியர் மக்கள் குறித்து பேசியதற்கு 24 மணி நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிப்பார் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார். அதேபோல், அருந்ததியர் மக்களைப் பற்றி சீமான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும், வந்தேறிகள் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில், ‘விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள் என்று தெரிவித்தார். ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகம் செங்குந்த முதலியார்கள். நாம் தமிழர் வேட்பாளரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான்.

அதே போல், கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிக் குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். இங்கு வசிக்கும் அருந்ததியர்கள்தான் அவர்கள் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக அருந்ததியர்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அருந்ததியர் அமைப்புகள் சீமான் தங்களை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் சீமான் பேச்சு தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தவறும்பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் மேனகா நவநீதன், அருந்ததியர் மக்களைப் பற்றி சீமான் எதுவும் தவறாக பேசவில்லை. வந்தேறிகள் என்ற வார்த்தையை சீமான் பயன்படுத்தவில்லை. வரலாற்றை மட்டும் தான் கூறினார். சில பேர் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அருந்ததி இன மக்கள் குறித்து பேசியதற்கு 24 மணி நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டிப்பாக பதில் அளிப்பார் என்று தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments