அ.தி.மு.கவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்ற செயற்குழுவில் பேசிய மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செயற்குழுவிலேயே முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது, ஏற்கெனவே முடிவெடுத்தபடி வழிகாட்டுதல் குழுவை அமைத்த பிறகு முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்யலாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி யோசனை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் அமைச்சர்கள் சிலர் தற்போதுள்ள சூழலே தொடர விருப்பம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். தொடர்ந்து சுமார் 5மணி நேரமாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது வரும் 7ந் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இணைந்து அறிவிப்பார்கள் என்றார்.