Thursday, April 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுதேங்காய் மட்டுமே உணவு குடிக்க மழைநீர் - பசுபிக் பெருங்கடலில் 32 நாள்கள் தவித்த 4...

தேங்காய் மட்டுமே உணவு குடிக்க மழைநீர் – பசுபிக் பெருங்கடலில் 32 நாள்கள் தவித்த 4 பேர்

பசிபிக் பெருங்கடல், உலகிலேயே மிகப்பெரும் கடல் என அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ 18 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்தப் பெருங்கடல் புவியின் மூன்றில் ஒரு பகுதியாக உள்ளது. இது புவியின் அனைத்து கண்டங்களின் நிலப்பரப்பைவிடவும் மிகவும் பெரியது. இங்கு சுமார் 20,000 முதல் 30,000 தீவுகள் உள்ளன. இந்தக் கடலில் சிக்கி 32 நாள்களாகத் தவித்துள்ளனர் பப்புவா தீவைச் சேர்ந்த நான்கு பேர்.

பப்புவா நியூ கினியா தீவைச் சேர்ந்த 12 பேர் கடந்த டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தங்கள் தீவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கார்டெரெட் தீவுக்கு (Carteret Island) ஒரு படகில் சென்றுள்ளனர். இந்தக் குழு பயணித்துக்கொண்டிருக்கும்போதே கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டு படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.

இதனால் படகில் பயணம் செய்த 12 பேரில் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள நால்வர் மட்டும் எப்படியோ உடைந்த படகைச் சரி செய்துகொண்டு நீண்ட நாள்களாகக் கடலிலேயே தத்தளித்துள்ளனர். பின்னர் ஒருவழியாகக் கடலின் நீரோட்டத்தில் ஜனவரி 23-ம் தேதி நியூ கல்டோனியா (New Caledonia) தீவுக்குச் சென்றுள்ளனர்.

இது பப்புவா நியூ கினியா தீவிலிருந்து 2000 கி.மீ தொலைவில் உள்ளது. பிறகு இவர்களைப் பார்த்த அந்தத் தீவின் கடற்படை அதிகாரிகள் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிர் பிழைத்த நான்கு பேரில் ஒருவரான ஸ்டாலி என்பவர், கடலில் தாங்கள் சந்தித்த அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் கூறியது:

நாங்கள் சென்ற படகு திடீரெனக் கவிழ்ந்துவிட்டது. அதில் பயணித்த எட்டுப் பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். ஒரு தம்பதி இறக்கும் தறுவாயில் அவர்களது குழந்தையை என்னிடம் ஒப்படைத்தனர். அடுத்த சில நாளில் உணவு, தண்ணீர் இன்றி அந்தக் குழந்தையும் இறந்து விட்டது.

கடலில் இறந்தவர்களின் உடலை எங்களால் கரைக்குக் கொண்டு வரமுடியாது. அதனால் அவர்களின் உடலை அப்படியே கடலிலேயே விட்டுவந்துவிட்டோம். இறந்த குழந்தையையும் கடலில் விட்டுவிட்டோம். நான், என் நண்பன், ஒரு பெண், 12 வயதுச் சிறுமி ஆகிய நான்கு பேர் மட்டும் உடைந்த படகைச் சரி செய்து மீண்டும் அதில் பயணித்தோம்.

நாங்கள் சுமார் 32 நாள்கள் கடலிலேயே இருந்திருப்போம். மழை நீரையும் கண்ணில்படும் தீவுகளில் கிடைத்த தேங்காய்களையும் மட்டுமே உண்டு நாங்கள் மீதிப் பயணத்தைத் தொடர்ந்தோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments