ஓட்டவா
உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்கொல்லி தொற்றுநோய், ‘கொரோனா வைரஸ்’க்கு உலகம் முழுவதும் 4,687 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு லட்சத்து 27,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய சோபி, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை சோதித்ததில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:
சோபிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, தற்போதைக்கு தனிமையில் இருப்பார். அவர் நன்றாக இருக்கிறார். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மேலும் அவருக்கு கொரோனா அறிகுறிகள் லேசாகவே இருக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.