Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசொந்த ஊருக்கு திரும்ப 500 கி.மீ., நடந்து வந்த தமிழக மாணவர் பலி

சொந்த ஊருக்கு திரும்ப 500 கி.மீ., நடந்து வந்த தமிழக மாணவர் பலி

ஐதராபாத்

ஊரடங்கால் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த தமிழக மாணவர், 500 கி.மீ., நடைப்பயணமாக கிளம்பினார். இந்நிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் வரும்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து அத்யாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டது. இதனால், வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். பலர், நடைபயணமாக சொந்த ஊர் திரும்பினர். ஆனால், இருக்கும் இடத்திலேயே அனைவரும் தனித்து இருக்குமாறும், சொந்த ஊருக்கு நடந்து செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் பாலசுப்ரமணி (வயது 23) என்பவர், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் படித்து வருகிறார். ஊரடங்கு அமலானதால், உணவின்றி தவித்த அவர் சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்து, 26 பேர் கொண்ட மாணவர்கள் குழுவுடன் நடைபயணம் மேற்கொண்டனர். சுமார் 500 கி.மீ., தூரம் நடந்து சென்று தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை அடைந்துள்ளனர். அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கியிருந்த போது, லோகேஷ்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவர்களை குழுவினர் அழைத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் லோகேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து அவருடன் வந்த குழுவினர் கூறியதாவது:

நாங்கள் கடந்த 3 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறோம். போக்குவரத்து வசதி ஏதும் கிடையாது. செல்லும் வழியில் சிலர் எங்களுக்கு உணவு அளிப்பார்கள். சிலர் எங்களை கொஞ்ச தூரம் அவர்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். எங்களுக்கு உதவி செய்த வாகன ஓட்டுனர்களை போலீசார் அடித்துள்ளனர். சமூக விலகல் அவசியம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் இப்படி கிளம்பி வந்து விட்டோம். எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லாவிட்டால், குழுவாக இருக்கும் எங்களுக்கு வராத கொரோனாவும் வந்து விடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

லோகேஷை ஐதராபாத்திலேயே அடக்கம் செய்ய இருந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தின் உதவியால் லோகேஷின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments