கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனிதநேயத்துக்கு இந்தியா முடிந்தவரை உதவிகள் செய்யும். இரு நாடுகளும் சேர்ந்து கரோனாவை வெல்வோம் என்று ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.
மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்தது.
ஆனால் அமெரிக்கா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், பிரேசில் போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, மனிதநேய அடிப்படையில் மாத்திரைகள் தேவைப்படும் நாடுகளுக்கு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசும் அறிவித்து தடைகளை நீக்கியது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்ததைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்தார். அதில், “அசாதாரண சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான கூட்டுறவு, ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இந்த உதவியை அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமைக்கும் நன்றி. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனிதநேயத்துடன் செயல்பட்டதற்கு இந்தியப் பிரதமருக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் நன்றிக்கு பதில் அளித்து பிரதமர் மோடி இன்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.. நீங்கள் சொல்வதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இதுபோன்ற நேரத்தில் நண்பர்கள் நெருக்கமாக முடியும். கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனிதநேயத்துக்காக இந்தியா முடிந்தவரை அனைத்து உதவிகளும் செய்யும். கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் சேர்ந்து வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.