பாஸ்டன்
கடந்த ஆண்டு, “மிஸ் இங்கிலாந்து” பட்டம் வென்ற, இந்திய வம்சாவளி பெண் டாக்டர் பாஷா முகர்ஜி, கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவ பணிக்கு திரும்புகிறார்.
மேற்கு ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள பாஸ்டன் நகரை சேர்ந்தவர், பாஷா முகர்ஜி, 24. அங்குள்ள பில்கிரிம் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு ஆக., மாதம், மிஸ் இங்கிலாந்தாக பட்டம் வென்றார். கோல்கட்டாவில் பிறந்தவரான இவர், மிஸ் இங்கிலாந்து பட்டத்தை தொடர்ந்து, தன் மருத்துவ பணிக்கு சிறிது காலம் ஓய்வு கொடுப்பதுடன், சமூக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்து, கடந்த மாதம் இந்தியா வந்தார். ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதல், அவருடைய திட்டங்களை தலைகீழாக மாற்றியுள்ளது.
இது குறித்து பாஷா முகர்ஜி கூறியதாவது:ஆப்பிரிக்கா, துருக்கிக்கு அடுத்து, நான் பயணித்த முதல் ஆசிய நாடு, இந்தியா. இதற்கடுத்து, மேலும் பல நாடுகளுக்கு செல்லும் விருப்பத்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாற்றிக்கொண்டு, நான் இருக்க வேண்டிய இடம், மருத்துவமனை என, முடிவு செய்துள்ளேன்.இந்தியாவில் இருந்தபோது, நான் பணியாற்றிய மருத்துவமனையின் சக நண்பர்கள், பிரிட்டனில் வைரஸ் தாக்குதலின் நிலை குறித்த தகவல்களை அனுப்பினர். எனவே, நாடு திரும்புவதுடன், உடனடியாக பணிக்கு செல்ல விரும்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதன்படி, நேற்று பிரிட்டன் வந்த பாஷா முகர்ஜி, இரண்டு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பின், மருத்துவ பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.