தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (மே 1) வீடியோ மூலம் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் 45 பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இன்று 98 வயது ஆண் ஒருவர் கரோனாவால், தீவிர சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 176 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 3,200 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இன்று செங்கல்பட்டில் 8 பேர், திருவள்ளூரில் 6 பேர், மதுரையில் 3 பேர், காஞ்சிபுரத்தில் 2 பேர், தஞ்சாவூரில் 2 பேர், கடலூர், திண்டுக்கல், கரூர், அரியலூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவர் என, இன்று மொத்தம் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.
எல்லா மாவட்டங்களிலும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் 33 ஆயிரத்து 819 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவையில் 6,322 பேர், சேலத்தில் 6,081 பேர், மதுரையில் 5,450, ஆரஞ்சு மண்டலமாக உள்ள தருமபுரியில் 2,174 பேர், புதுக்கோட்டையில் 1,595 பேர், பச்சை மண்டலம் கிருஷ்ணகிரியில் 1,000 பேருக்கு மேல் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
முதல், இரண்டாம்நிலை தொடர்புள்ளவர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகள், சுகாதார பணியாளர்கள், சந்தேகம் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து வருகிறோம். இந்தியாவிலேயே அதிகமாக பரிசோதிக்கிறோம். தேசிய எபிடமலாஜி நிறுவனத்தின் மருத்துவ வல்லுநர்கள், மூத்த மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ சங்கத்தில் உள்ள மூத்த மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதிகமாக பரிசோதனை செய்ய முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிகமாக பரிசோதிப்பதால் தான் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவை விட அதிகமாக பரிசோதிக்கிறோம். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவை விட அதிகமாக பரிசோதனை செய்கிறோம்.
இந்தியாவில் 9 லட்சத்திற்கும் அதிகமாக மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் 14% தமிழகத்தில் பரிசோதிக்கப்பட்டவை. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேரில் 165 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இந்திய அளவில் ஒரு லட்சம் பேரில் 65 பேருக்குத்தான் பரிசோதிக்கின்றனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக பரிசோதிக்கிறோம். தேவைப்படுவோருக்கு நேரடியாகவே சென்று பரிசோதனை செய்கிறோம். 24 மணிநேரத்தில் அதன் முடிவுகள் கிடைக்கின்றன. 54% பேரை குணப்படுத்தியிருக்கிறோம். இந்தியாவிலேயே இதன் விகிதம் தமிழகத்தில் தான் அதிகம். 1.2% தான் தமிழகத்தில் இறப்பு விகிதம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
சுகாதார பணியாளர்களுக்கு முதல்வர் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். காய்ச்சல், சளி மூச்சுப் பிரச்சினை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்கிறோம். தமிழகத்தில் உள்ள 703 தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணிகளை கண்காணிக்கிறோம். புற்றுநோய், டயாலிசிஸ் செய்பவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூத்த குடிமக்களைக் கண்காணித்து வருகிறோம்.
மருத்துவப் பணியாளர்கள் போன்று தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் கொடுக்கிறோம். ஜிங்க், வைட்டமின் ஆகிய மாத்திரைகளையும் வழங்குகிறோம். பொதுமக்கள் பயப்பட வேண்டாம், பீதியடைய வேண்டாம். அரசின் அறிவுரைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.