இந்தியாவில், கணிசமான குடும்பங்களில் மாத பட்ஜெட்டில், EMI ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. கொரோனா காலத்தில், இந்த EMI-ல் இருந்து தப்பிக்க, ஆர்பிஐ 6 மாதம் EMI-களை ஒத்தி வைக்க அனுமதி கொடுத்து இருக்கிறது. அதாவது 6 மாத EMI Moratorium கொடுத்து இருக்கிறது. EMI கட்ட வேண்டாமே தவிர, வட்டி வழக்கம் போல கணக்கிடுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார்கள். இது மக்களை வெகுவாக பாதிக்கும் செயலாகும். இந்த EMI ஒத்திவைப்பு காலத்திலும், வட்டியை கணக்கிடும் பிரச்சனையை எதிர்த்து கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
ஒருபக்கம் மக்கள் நன்மைக்காக வங்கிகள் EMI-களை ஒத்திவைத்து இருக்கிறார்கள். மறு பக்கம் ஒத்திவைக்கும் EMI-க்கு வட்டியும் போடுகிறார்கள். இந்த வட்டிச் சுமையையும் கடன் வாங்கியவர் தான் செலுத்த வேண்டும். இது ஒரு கையில் நன்மையை கொடுத்துவிட்டு, மறுகையால் அந்த நன்மையை பறிப்பது போல இருக்கிறது என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாத இறுதியில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அசோக் பூஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும், மத்திய ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம், தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கச் சொல்லி நோட்டிஸ் அனுப்பியது. அதற்கு இப்போது ஆர்.பி.ஐ தன் பதிலை சமர்பித்து இருக்கிறது.
EMI Moratorium காலத்தில், கடன்களுக்கான வட்டியை ரத்து செய்வது சரியான நடவடிக்கையாக ஆர்.பி.ஐ கருதவில்லை. இப்படி வட்டியை ரத்து செய்தால் அது வங்கிகளின் ஒட்டு மொத்த நிதி நிலையும் கேள்விக்குறியாகி விடும். அதோடு வங்கிகளில் டெபாசிட் செய்து இருப்பவர்களின் நலனும் சிக்கலுக்கு உள்ளாகும் என விளக்கம் கொடுத்து உள்ளது.
மேலும் மத்திய ரிசர்வ் வங்கிக்கு, இந்தியாவில் இருக்கும் வங்கிகளில், தங்கள் பணத்தை டெபாசிட் செய்து இருக்கும் டெபாசிட்தாரர்களையும், டெபாசிட்தாரர்களின் நலனையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதோடு வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு வங்கிகள் லாபகரமாக இயங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து “வங்கிகள் லாபகரமாக இயங்க வேண்டும் என்றால், அதற்கு அதிக வருவாய் வர வேண்டும். வங்கிகளுக்கு, அதிக வருவாய் வருவதே, வங்கிகள், தன் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடன்களுக்கான வட்டியில் இருந்து தான்” என தெளிவாக மத்திய ரிசர்வ் வங்கி பதில் கொடுத்து இருக்கிறது. ஆக, EMI Moratorium காலத்தில் வட்டியை வசூலித்தே ஆக வேண்டும் என சொல்லி இருக்கிறது ஆர்.பி.ஐ.