திருவாடானை
”இரவில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்த போது, 1,000 சீன வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்,” என, ராணுவ வீரர் இதயக்கனி தெரிவித்தார்.
லடாக் கல்வான் எல்லையில், சீன ராணுவத்தின் திடீர் தாக்குதலில், ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலுார் ராணுவ வீரர் பழனி, 40, உட்பட, 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நேற்று கடுக்கலுார் கிராம மக்கள், சோகத்துடன் காணப்பட்டனர்.பழனி சகோதரர் இதயக்கனி, (34), ராஜஸ்தான் மாநிலத்தில், ராணுவத்தில் பணியாற்றுகிறார். அவர் நேற்று காலை, 9 மணிக்கு கடுக்கலுார் வந்தார்.
இதயக்கனி கூறியதாவது:
நான், 2011ல் வேலைக்கு சேர்ந்தேன். அண்ணனுடன் அடிக்கடி அலைபேசியில் பேசுவேன். ஒரு மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் மரணம் குறித்து, மற்ற வீரர்களிடம் விசாரித்தேன். அவர்கள், ஜூன் 15 இரவு 9:30 மணிக்கு, 150 இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். அப்போது, 1,000 சீன வீரர்கள் திடீரென கற்களாலும், கம்பியாலும் தாக்கினர். இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினர். ஆறு இந்திய வீரர்கள், அருகிலிருந்த நதியில் விழுந்ததால், அவர்களின் நிலைமை தெரியவில்லை என்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
பழனியின் குடும்பத்தினருக்கு, கலெக்டர் வீரராகவ ராவ் ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், ”வீர மரணம் அடைந்த பழனியை, அடக்கம் செய்யும் இடத்தில், நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர். பரிசீலனை செய்யப்படும்,” என்றார்.