சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இத்தடை தொடர்பாக உத்தரவில் இன்று (சனிக்கிழமை) கையெழுத்திட உள்ளதாகச் செய்தியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
சீனாவின் மிக பெரிய தொழில் நுட்ப நிறுவனமான “பைட் டான்ஸ்” நிறுவனம் டிக் டாக் செயலியை நடத்தி வருகிறது. இந்தநிலையில், அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்ட டிக் டாக் செயலி பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
சீன அரசால் இயக்கப்படுவதாகவும், சீனா அரசுக்குத் தரவுகளை அளிப்பதாகவும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை டிக் டாக் மறுத்து வருகிறது.
அமெரிக்காவில் 80 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ள டிக் டாக், அங்கு வேகமாக வளர்ந்து வந்தது. தற்போது இந்த தடை பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது.
டிக் டாக் மீதான தடை எவ்வாறு செயல்படுத்தப்படும், அது என்ன சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், டிரம்ப் அரசு இதற்கு அனுமதிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை மீறி ஒரு வேளை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்கினால், பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் என தகவல்கள் கூறுகின்றன.
டிரம்பின் தடை அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்க டிக் டாக்கின் ஒரு செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.