Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை - வேகமாக அதிகரித்து வரும் காய்கறி விலை

கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை – வேகமாக அதிகரித்து வரும் காய்கறி விலை

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 5 ஆம் தேதி மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை 4 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 28 ஆம் தேதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. மொத்த மற்றும் சில்லறை என சுமார் 2,000 கடைகளை கொண்ட கோயம்பேடு சந்தையில், 197 மொத்த கடைகளை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது.

அதோடு, நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை விற்பனை செய்ய கடை உரிமையாளர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு உதகை, பெங்களூரில் இருந்து கேரட் கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் ஒருநாளைக்கு சராசரியாக 80 டன் இருந்த நிலையில், தற்போது தொடர் மழை காரணமாக 40 டன்னாக குறைந்துள்ளது.

இதனால் கடந்த வாரம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், தற்போது 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பெரிய வெங்காயம் 40 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும், பச்சை மிளகாய் கிலோ 30-இல் இருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பீன்ஸ், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 30 முதல் 35 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அதேசமயம், தக்காளி, அவரைக்காய், வெண்டை, கத்திரிக்காய் போன்றவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. தக்காளி 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 25 ரூபாய்க்கும், அவரை 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கோயம்பேடு சந்தை முழுமையாக திறக்கப்பட்டால் மட்டுமே, காய்கறி விலை கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments