மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனி, கடந்த 02 அக்டோபர் 2020, வெள்ளிக்கிழமை தான், தங்களின் புத்தம் புதிய தார் எஸ் யூ வி (Thar SUV) ரக வாகனங்களை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த 02 அக்டோபர் 2020 முதல் 05 அக்டோபர் 2020 வரையான நான்கு நாட்களில் மட்டும், 9,000-க்கு மேற்பட்ட தார் எஸ் யூ வி ரக வாகனங்கள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறதாம்.
இந்தியாவில் இதுவரை, 18 முக்கிய மற்றும் பெரிய நகரங்களில் மட்டும் தான், தார் எஸ் யூ வி சோதனை ஓட்டத்துக்கு (Test Drive) ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறதாம். அதற்கே 9,000-க்கும் மேல் வாகனங்கள் புக் செய்யப்பட்டு இருப்பது பெரிய விஷயம் என்கிறார்கள்.
இந்தியா முழுக்க எவ்வளவு விரைவாக, தார் எஸ் யூ வி வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்குக்கான வசதிகள் செய்ய வேண்டுமோ, அத்தனை விரைவாக ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்களாம். கூடிய விரைவில் இந்தியா முழுக்க தார் எஸ் யூ வி வாகனத்தை ஓட்டிப் பார்த்து நீங்களும் புக் செய்யலாம்.
இந்த ரக வாகனங்களுக்கு இத்தனை அதிக புக்கிங்கள் இதுவரை வந்தது கிடையாது என மஹிந்திரா & மஹிந்திரா ஆட்டோமொபைல் கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரி விஜய் நக்ரா சொல்லி இருக்கிறார். இந்த புதிய தார் எஸ் யூ வி ரக வாகனத்தின் விலை 9.8 லட்சம் முதல் 13.75 லட்சம் ரூபாய் வரை இருக்கிறதாம். AX மற்றும் LX என இரண்டு ரக வாகனங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் என தனித் தனி வேரியன்ட்களும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம்.
தார் எஸ் யூ வி ரக வாகனங்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டதாம். தார் எஸ் யூ வி வாகனங்களை மஹிந்திரா & மஹிந்திரா கம்பெனியின் நாசிக் ஆலையில் உற்பத்தி செய்கிறார்களாம். தேசிய பங்குச் சந்தையில், நேற்று (5 அக்டோபர் 2020, திங்கட்கிழமை) 607 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த மஹிந்திரா & மஹிந்திரா பங்கு விலை, இன்று வர்த்தக நேர முடிவில் 3.54 % விலை ஏற்றம் கண்டு, 628 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.