விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரிக்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை ராஜிநாமா செய்த பஞ்சாப் சிறைத்துறை டி.ஐ.ஜி.
தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் சிறைத் துறை துணைத் தலைவர் லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அபோஹாரில் உள்ள கிலியான்வாலி கிராமத்தைச் சேர்ந்த லக்மிந்தர் சிங் ஜாகர் நவம்பர் 11, 1994 அன்று பஞ்சாப் சிறைச்சாலைத் துறையில் துணை கண்காணிப்பாளராக இணைந்தார். தற்போது சிறைத் துறையின் துணைத் தலைவராக உள்ளார். 2022 ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறவிருந்தார். மாநில சிறைத் துறையில் சேருவதற்கு முன்பு 1989 முதல் 1994 வரை ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார்.
விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனது ராஜிநாமா கடிதத்தை அவர் பஞ்சாப் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.
பஞ்சாப் அரசு இன்னும் அவரது ராஜிநாமாவை ஏற்கவில்லை.இது குறித்து ஜாகர், “நான் முதலில் ஒரு விவசாயி, பின்னரே ஒரு காவல்துறை அதிகாரி. என் தந்தை பல கஷ்டங்களை எதிர்கொண்டு விவசாயம் செய்து என்னை படிக்க வைத்தார். என் கல்வி கட்டணத்தை செலுத்தியது எவ்வளவு கடினம் என்பதை என் தந்தை தெரிவித்தார். நான் விவசாயத்திற்கு எல்லாவற்றிற்கும் மேலாக கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான் நான் ராஜிநாமா செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.