இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பறவைகள் உயிரிழந்ததற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இதுவரை உயிரிழந்த 2400 பறவைகளில், பெரும்பாலானவை பட்டை தலை வாத்துகளாகும்.
பாங் அணைப்பகுதியில் இருந்து இறந்த 5 வாத்துகளின் உடல்கள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், எச்5-என்1 என்ற ஏவியன் இன்புளுயன்சா வைரஸ் தாக்கியதால் தான் பறவைகள் உயிரிழந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கடந்த சில வாரங்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதனால் அங்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
எனவே ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் இரு மாவட்டங்களிலும் 36 ஆயிரம் வாத்துக்களை கொல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் 170 க்கும் மேற்பட்ட பறவைகள் எச்5-என்1 நோயால் உயிரிழந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து நேற்று 425க்கும் அதிமான பறவைகள் இறந்ததால் அங்கும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளதாக ராஜஸ்தான் மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கால்நடை வளர்ப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசு தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பறவைக் காய்ச்சல் உறுதியானதைத் தொடர்ந்து பறவைகள் மற்றும் விலங்குகளின் உயிரிழப்பு குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநில அரசு கூறியுள்ளது.