Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள் மறுப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவர்கள் மறுப்பு

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 16 சனிக்கிழமையன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அரசு அவசரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, இதுவரை இரண்டு கட்ட பரிசோதனை தரவுகளே வெளிவந்துள்ளன.

மூன்றாம் கட்டபரிசோதனை தரவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நேற்றைய தினம் நாடு முழுவதும் 3 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதில், முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி இரண்டாவது நாளாக இன்று தொடங்கும் நிலையில், நேற்றைய தினம் டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 52 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 52 பேருக்கு உடல் இறுக்கம், மயக்கம், தோல் அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்குப் பின் பெரும்பாலோனார் வீடு திரும்பி விட்டனர். அதேபோல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பாதுகாவலர் ஒருவருக்கு 20 நிமிடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், தொடர்ந்து அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல், கொல்கத்தாவிலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட 35 வயது மதிக்கத்தக்க செவிலியர் ஒருவர் மயக்கமடைந்துள்ளார். டெல்லியில் மட்டும் இத்தகைய சூழல் என்றால், நாடு முழுவதும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று டெல்லியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் முக்கிய அரசு மருத்துமனையான ராம் மனோகர் லோகியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. பாரத் பயோடெக் மூன்றாம் கட்ட சோதனை ஆய்வுகளை முழுமையாக முடிக்கவில்லை என்கிற புகார் எழுந்துள்ளதால், அதன் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, அந்த தடுப்பூசியை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.

அதேபோல் தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்ட தலைமை மருத்துவமனையில், நேற்று காலை அனுமதிக்கப்பட்ட 86 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிகள் நடைபெற்றது. ஆனால், மதியம் வரை தேர்வு செய்யப்பட்ட 86 முன்கள பணியாளர்களில் ஒருவர் கூட தடுப்பூசி போட முன் வரவில்லை.

இதனிடையே தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே அச்சம் எழத் தொடங்கியுள்ளது. ஆனால், மத்திய அரசோ, தடுப்பூசி போடப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு தடுப்பூசி போடுவதில் அவசரம் காட்டக்கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments