கொரோனாவை தொடர்ந்து
கொரோனா நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிய (Black Fungus) கருப்பு பூஞ்சை நோய் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தற்போது மஹாராஷ்ட்டிராவில் அதிகரிகக்க துவங்கி இருப்பதால் கட்டுப்படுத்துவற்கான மருந்து உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது. இந்த தருணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகிற நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ (Mucormycosis) என்று அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது ஓர் அரிதான மற்றொரு தொற்று நோய். இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய்தான்.
கொரோனா நோயாளிகளுக்கு உயிரைக் காக்க தருகிற “ஸ்டீராய்டு’ மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என, டாக்டர்கள் கூறுகின்றனர். ஸ்டீராய்டுகள், கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து, கொரோனாவை எதிர்த்துப் போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகிற சில சேதங்களை தடுக்கின்றன.
ஆனால் அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன. நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்ததும் இதற்கான மருந்து தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியூகோர்மைகோசிஸின் அறிகுறிகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், எதிர்ப்பு ஆற்றல் முடக்கப்பட்டவர்களுக்கு சில அறிகுறிகள் மூலம் மியூகோர்மைகோசிஸ் உறுதி செய்யப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
குறிப்பாக, மியூகோர்மைகோசிஸ் முக சிதைவை ஏற்படுத்தும். மூக்கடைப்பு மற்றும் மூக்கின் வழியே கறுப்பாகவோ, ரத்தமாகவோ திரவம் வெளியேறுதல்; கன்ன எலும்புகளில் வலி இருப்பது மியூகோர்மைசிஸ் நோய்க்கான முதன்மை அறிகுறிகள். முகத்தில் உணர்வின்மை, வீக்கம்; மூக்கிற்கும், மேல்வாய்க்கும் இடைப்பட்ட பகுதி கறுப்பாக மாறுதல், பல் வலி அதிகமாக இருத்தல், கண் மங்கலாக இரட்டையாக தெரிவது காய்ச்சல் போன்ற நிலை, மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிடவையும் கூட இதன் அறிகுறிதான்.