அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் 12,500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களின் கல்வி தேவைக்காக இப்பகுதியில் உண்டு உறைவிடப் பள்ளி உள்பட மொத்தம் 19 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், 200 பேர் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கொரோனோ ஊரடங்கின் காரணமாக அனைவரும் அவர்கள் வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பு மற்றும் கல்வி சேனலை பார்த்து படித்து வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இங்குள்ள டவர் வேலை செய்யாததால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஆன்லைனில் வரும் வகுப்புகளையும் பார்க்க முடியாமல் இருந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் கூட, மின்வெட்டால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, மலைக்கிராம பள்ளி மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது.
மலைப் பகுதியை பூர்வீகமாக கொண்டு உயர்நிலைக்கல்விக்காக ஈரோடு, சேலம், கோவை, சென்னை சென்று விடுதிகளில் தங்கி படித்த மாணவர்கள் பலரும் கொரனோ ஊரடங்கால் சொந்தஊர் திரும்பியுள்ளனர். ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு பயின்று வரும் நிலையில் தற்போது நெட்வொர்க் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, இந்த ஆண்டு செமஸ்டர் பாஸ் செய்வதே கஷ்டம் என கல்லூரி மாணவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் பிஎஸ்என்எல் டவர் மட்டுமே உள்ளது. அதுவும் 3ஜி நெட்வொர்க் தான். கடந்த ஒரு மாத காலமாக இந்த நெட்வொர்க் சரி வர கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. கல்வி மட்டும் அல்லாது உயிருக்கு ஆபத்து என்றாலும் 108 ஆம்புலன்சை கூட அழைப்பதற்கு முடியாத அவல நிலை இருப்பதால் தற்போது இங்கு உள்ள நெட்வொர்க் சரிவர கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வேறு தனியார் செல் நெட்வொர்க் கம்பெனிகளுடன் பேசி அவர்கள் இங்கு டவர் அமைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.