Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்களை சந்தித்த தலிபான்கள் - முழு பாதுகாப்பு கொடுப்போம் என வாக்குறுதி.

ஆப்கனில் இந்துக்கள், சீக்கியர்களை சந்தித்த தலிபான்கள் – முழு பாதுகாப்பு கொடுப்போம் என வாக்குறுதி.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைபற்றி உள்ளனர்.

ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவ படைகள் விலகிச்சென்ற பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர்.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தான் நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் முழுக்க, முழுக்க கடும் பயத்தில் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று ஒரு சில மக்கள் தவித்து வருகின்றனர். இங்கிருந்து சென்றால் போதும் என நினைத்து விமானங்களில் தொங்கி கொண்டு பயணம் செய்து அநியாயமாக பலர் உயிரை இழந்து வருகின்றனர்.

தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதால் பெண்களுக்கு உடை அணிவது உள்ளிட்ட விஷயங்களில் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும், மற்ற ஜனநாயக நாடுகளை போல் அங்கு சுதந்திரம் இருக்காது என்று கருதியே ஆப்கான் நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதேபோல் அனைத்து நாடுகளும் ஆப்கானில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை மூடியுள்ளன. ஆப்கானில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களையும் அவசர, அவசரமாக அங்கு இருந்து அழைத்து வருகினறனர்.

இந்தியாவும் ஆப்கான் தலைநகர் காபூலுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி அங்கு இருக்கும் இந்தியர்களை அழைத்து வருகிறது. மேலும், ஆப்கானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாராவில் 300-க்கும் மேற்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தூதரகத்தை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை.

குருத்வாரா கார்த்தே பர்வான் சாஹிப்பில் தஞ்சம் அடைந்து விடுதிகளில் தங்கியிருக்கும் இந்து சீக்கிய மக்களை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுகிறேன் என்று இந்திய தூதரகத்திற்கு அருகில், அகாலி தளத்தின் செய்தித் தொடர்பாளரும், டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவின் (DSGMC) தலைவருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா நேற்று தெரிவித்தார்.

இவ்வாறு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் பீதியில் ஆழ்ந்திருக்க ஆப்கானில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்போம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர். கஜினி மற்றும் ஜலாலாபாத்தில் வசிக்கும் 320-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் (50 இந்துக்கள் மற்றும் 270-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் உட்பட) காபூலில் உள்ள கார்தே பர்வான் குருத்வாராவில் தஞ்சமடைந்துள்ளனர். தலிபான் தலைவர்கள் அவர்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசியல் மாற்றங்கள் நடந்தாலும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று தலிபான் தலைவர்கள் உறுதி அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மிகவும் அடக்குமுறையை கையாளுவர்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் தலிபான்கள் அளித்த பேட்டி அதற்கு எதிர்மறையாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி மற்ற நாடுகளுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் மிகவும் சுதந்திரமாக வாழ முடியும் என்றும் தலிபான்கள் உறுபதிபட தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சீக்கியர் மற்றும் இந்து சமூகங்களின் பிரதிநிதிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு நாங்கள் உதவுவோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தது. இதன்படி ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சிறப்பு விமானங்களை இயங்கி அங்கு இருப்பவர்களை மீட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments