கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஆண், பெண் பயன்படுத்திய ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி மற்றும் அகரத்தில் ஆண்கள், பெண்கள் காது மற்றும் கழுத்தில் அணியும் ஆபரணங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.
பாசி, பவளம், சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ள இவைகளில், நடுவில் துளை போன்ற அமைப்பும் காணப்படுகிறது. செடி, கொடிகளில் கோர்த்து இதனை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
வட்ட வடிவிலான சுடுமண் காதணிகளில் உள்ள துளைகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. சுடுமண் காதணிகளில் அழகுக்காக புள்ளிகள் உள்ளிட்டவைகளை வரைந்துள்ளனர்.
கீழடி, அகரத்தில் எடுக்கப்பட்ட காதணிகளை விரைவில் காட்சிக்கு வைக்க தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கீழடிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.