கோவை விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் லெப்டினன்ட் கைது செய்யப்பட்டார்.
கோவை சுங்கம் பகுதியில் இந்திய விமானப்படையின் பயிற்சி கல்லூரி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 அதிகாரிகள் பயிற்சிக்காக அங்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் என்பவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரி ஒருவர் கோவை மாநகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை, விமானப்படை பயிற்சி கல்லூரி வட்டாரங்களில் விசாரித்தோம். “கடந்த சில நாள்களுக்கு முன்பு பயிற்சி கல்லூரியில் மது விருந்து நடைபெற்றது. மது விருந்துக்கு பின்னர் பெண் அதிகாரி தனது அறையில் ஓய்வெடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. விளையாட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அன்று மருந்து எடுத்துக்கொண்டு தூங்கியதாக பெண் அதிகாரி புகாரில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
அன்றைய தினம் இரவு தான் அமிர்தேஷ், அந்தப் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண் விமானப்படையிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், போதுமான வேகத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுவில்லை என்பதால் அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அமிர்தேஷ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, ‘விமானப்படை அதிகாரி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று அமிர்தேஷின் வழக்கறிஞர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் கோவை காவல்துறை பதிலளிக்க கூறி, அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.