நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரண்டு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என இடைநீக்கம் செய்து அவை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் விவாதமின்றி 3 விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் எந்தவொரு விஷயத்தையும் விவாதிப்பதற்கு முன் வந்தார். ஆனால் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் விவாதம் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது. “விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க” என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.