மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி க்கு வீராங்கனை நன்றி தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பெண்களுக்கான கூடைப்பந்து பயிற்சி மையத்தை வாரணாசிக்கு மாற்றி உத்தரவு வந்ததை தொடர்ந்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அனுராக் தாகூர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரினார்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மயிலாடுதுறை பயிற்சி மையத்தினை வாரணாசிக்கு மாற்றியமைக்கும் உத்தரவினை ரத்து செய்து இந்திய விளையாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பின்னனியில் மயிலாடுதுறை பயிற்சி மையத்தில் தங்கி பயின்று வரும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஹர்ஷிதா மற்றும் அவரது பெற்றோர்கள் கார்த்திக், சோபியா ஆகியோர் நாடளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்;
பயிற்சி மையம் வாரணாசிக்கு சென்றால் தங்களது மகள்களின் எதிர்கால கல்வி மற்றும் விளையாட்டு கனவுகள் என்னவாகும் என்கிற பெரும் கவலையை போக்கும் விதமாக தமிழக மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்சி மையத்தை மீண்டும் பெற்றுத் தந்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர்.
நேரில் சந்தித்த கூடைப்பந்து வீராங்கனை ஹர்ஷிதா தனது சேமிப்பில் வாங்கிய பரிசினை சு.வெங்கடேசன் எம்.பி அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்.