Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுஇந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

அம்மான்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாஷ்சை சந்திக்க இருந்தார்.

அரைஇறுதிசுற்றின் போது இடது கண் இமை பகுதியில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜியாத் இஷாஷ் களம் இறங்காமலேயே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விகாஸ் கிருஷ்ணன் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.

63 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 4-1 என்ற கணக்கில் கடந்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஹாரிசன் கார்சிட்டை சாய்த்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் முந்தைய காமன்வெல்த் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். 81 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்தியாவின் சச்சின் குமார் 0-5 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் ஷப்போஸ் நெக்மதுல்லோவிடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை கோட்டை விட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டையில் இதுவரை இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோ) ஆகிய 9 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் இருந்து குத்துச்சண்டையில் ஒரு ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு 8 இந்தியர்கள் தகுதி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments