புதுடெல்லி
உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும் என்ற சூழல் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அந்தந்த நாட்டு அரசால் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்திய அரசும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். பின்னர் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்த மக்கள் தானாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர்.
இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நாட்டில் தடுப்பூசி செலுத்தியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 25 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிராக இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மேலும் இதுவரை 68 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர்.
கொரோனா இறப்பைத் தடுப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. 2-வது டோஸ் போட்டுக்கொண்டோருக்கு கொரோனாபாதிப்பு மற்றும் இறப்புக்கு எதிராக மொத்த பாதுகாப்பை (97.5%) வழங்குகிறது என்று புள்ளிவிபரம் கூறுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, நான்கு பெரிய மாநிலங்களான குஜராத் (40%), மத்திய பிரதேசம் (27%), மராட்டியம் (26%), மற்றும் உத்தரபிரதேசம் (13.34% ) ஆகிய மாநிலங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 20 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.