இலங்கை அரசு யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்குக் கப்பல் சேவையைத் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யாழ்ப்பாணம் – காங்கேசன் துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் கப்பல் சேவை அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் சொகுசு கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும், நட்புறவுடன் இருக்க வாய்ப்பாகவும் அமையும் எனவும், இதனைத் தொடர்ந்து, தென்னிந்தியாவிலிருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் இந்த கப்பல் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும். அதற்காகத் துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சொகுசு கப்பலில் 400 பயணிகள் வரை பயணம் செய்யலாம். யாழ்ப்பாணத்திலிருந்து புதுச்சேரிக்கு மூன்றரை மணி நேரம் கடலின் அழகை ரசித்தபடி பயணிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் இக்கப்பலில் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.