Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை ஊடக சுதந்திரத்தை பறிக்கும் அதிகார திமிர் - வேல்முருகன்

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை ஊடக சுதந்திரத்தை பறிக்கும் அதிகார திமிர் – வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் இன்று (14-02-2023) வெளியிட்டுள்ள அறிக்கை.

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை :  ஊடக சுதந்திரத்தை பறிக்கும் அதிகார திமிர்!

உலகளவில் ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளின் பட்டியலில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 150-வது இடத்திற்கு சென்றிருக்கிறது என்கிறது எல்லைகளில்லா பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பின் அறிக்கை.

அதனை மெய்பிக்கும் வகையில், சர்வதேச அளவில் பிரபலமான பிபிசி ஊடக நிறுவனத்துக்கு இந்தியாவின் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களில், வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டது.

பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் ஒன்று இந்தியாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா கலவரத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்கள் இந்த ஆவணப்படத்தில் இருந்தன.

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அரசியல் குறித்தும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பிபிசி நிறுவனம்  அம்பலப்படுத்தி இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது அதிகார திமிரை பயன்படுத்தி, ஆவணப்படத்தை வெளியிடுவதற்கு தடை செய்தது. மேலும்,  பிபிசி நிறுவனத்தை அச்சுறுத்தி, பணிய வைக்க, அந்நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையை ஏவி விட்டுள்ளது.

பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்றவர்கள் மட்டுமல்ல, அதை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்வதற்கும் முயலும் ஏதேச்சையக்காரர்கள் ஆவர். அதன் வெளிப்பாடு தான், பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறையின் சோதனை.

நாடே அறிந்த உண்மையாகினும் தன்னை எதிர்த்து எந்தக் கருத்தும் வரக்கூடாது. அப்படி வந்தால் அது எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதற்கு இவை சிறு உதாரணங்கள்.

செய்தியை பரப்புவதிலும் அரசின் அமைப்புகளையும் பாதுகாப்பையும் கண்காணிக்கும் ஜனநாயக கடமையை காப்பதிலும் ஊடகங்கள் முக்கியமானவை என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமல், அந்த ஊடகங்களை மிரட்டி, தனக்கு சேவகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாசிச மோடி அரசு.

எனவே, பாசிச கும்பலின் பல்வேறு வகைகளில் அடக்குமுறைகளைச் செலுத்துவதன் மூலம், சமூக ஊடகங்கள் மற்றும் சுதந்திர ஊடகங்களை முடக்க எத்தனிக்கிறது.  இதற்கெதிராக, இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

அதோடு, எந்த ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக, பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்டதோ, அந்த ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுக்க திரையிட, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முயற்சி எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

- Advertisment -

Most Popular

Recent Comments