சென்னை
விஜய் ஆட்சிக்கு அடுத்த 6 மாதங்களுக்கு திமுக எந்த வித இடையூறையும் வழங்க மாட்டோம் என திமுக தலைவரும் காபந்து முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசின் சில திட்டங்களை விஜய் ஆட்சி தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவர்கள் ஆட்சியமைக்கத் தி.மு.க. முட்டுக்கட்டை போடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி, அதிக இடங்களைப் பிடித்த விஜய்யின் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோருவதில் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் ஆட்சியமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். விஜய் தலைமையிலான புதிய அரசு அமையட்டும். அவர்கள் மக்களுக்குச் செய்துள்ள வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனிப்போம். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.



