வருமான வரித்துறை பறிமுதல் செய்த கணக்கில் வராத பணம் குறித்து காங்கிரஸ் எம்பி.யிடம் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பவுத் மதுபான நிறுவனம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 3 நாட்கள் சோதனை நடத்தியது. இதன் போது, ஜார்கண்ட் காங்கிரஸ் எம்பி தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத பணம் கட்டு கட்டாக கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.300 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிர்சா முண்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே, “காங்கிரஸ் எம்பியாக இருப்பதால் தீரஜ் சாஹுவிடம் எங்கிருந்து அவருக்கு இவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. மற்றபடி, இது அவருடைய தனிப்பட்ட விவகாரம். இதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது,” என்று தெரிவித்தார்.