டெல்லி
பிரதமர் மோடி தமது கார்ப்பரேட் நண்பர்களுக்காக ₹16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தமது கோடீஸ்வர நண்பர்களுக்காக ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார். அதாவது ₹16 லட்சம் கோடி.
இந்த ₹16 லட்சம் கோடி என்பது என்ன?
நாட்டின் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கக் கூடிய வேலைவாய்ப்பை தரக் கூடியது இந்த ₹16 லட்சம் கோடி.
நாட்டின் 16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் என ₹16 லட்சம் கோடியை கொடுத்தால் அத்தனை கோடி குடும்பங்களின் நிலைமையையே மாற்றக் கூடியது.
₹16 லட்சம் கோடியை கொண்டு 10 கோடி விவசாய குடும்பங்களின் கடன்களை தள்ளுபடி செய்திருந்தால் விவசாயிகளின் தொடர் தற்கொலைகளைத் தடுத்திருக்க முடியும்.
₹16 லட்சம் கோடி மூலமாக ஒட்டுமொத்த தேசத்துக்கும் 20 ஆண்டுகளுக்கு ₹400-க்கு கேஸ் சிலிண்டரை தர முடியும்.
நாட்டின் ஒட்டுமொத்த ராணுவத்துக்கும் 3 ஆண்டுகளுக்கான செலவுதான் ₹16 லட்சம் கோடி. நாட்டின் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்களுக்கு இலவச கல்வியைத் தரக் கூடியது இந்த ₹16 லட்சம் கோடி.
இந்தியர்களின் வலியைப் போக்கக் கூடிய ₹16 லட்சம் கோடியை அதானிகளுக்காக பிரதமர் மோடி செலவிடுகிறார். இந்த பெருங்குற்றத்துக்காக தேசம் ஒரு போதும் மோடியை மன்னிக்காது. நாட்டின் நிலைமை மாறிவிட்டது. ஒவ்வொரு இந்தியருக்குமான காங்கிரஸ் அரசாங்கம் அமையும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.