பாஸ்ட்புட் எனப்படும் ரோட்டோர கடைகளிலும் உணவகங்களிலும் விற்கப்படும், துரித உணவுகள் அதனை உண்பவர்களின் உடலுக்கு எத்தனை கோளாறுகளையும் நோய்களையும் உருவாக்குகிறது என்பது குறித்து விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களை சென்றடைந்து வருகிறது. என்றாலும் அவற்றின் ருசிக்கு அடிமையாகிவிட்ட நம் மக்கள், கேடு என தெரிந்தும் தேடி சென்று காசு கொடுத்து நோயை வாங்கி வருகிறார்கள்.
பெரியவர்களுக்கு இப்படியொரு பாதிப்பு என்றால், அதனை அடிக்கடி உண்ணும் குழந்தைகளுக்கும் ஞாபக சக்தி குறைவு ஏற்படும் என்கிற ஆய்வு முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த துரித உணவுகளே இன்றைய கால குழந்தைகளில் பெரும்பாலானோர் படிப்பில் கோட்டை விடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஏன், 400 மொழிகளில் பேசி அசத்தும், பல சாதனைகளை புரிந்த உலக புகழ் பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த மஹ்மூத் அக்ரம் என்கிற 13 வயது சிறுவன் கூட, தனது ஞாபக சக்தியை மேம்படுத்த, பாஸ்ட் புட், சர்க்கரை, மைதா போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பதாகவும், அவற்றிற்கு பதிலாக கேழ்வரகு, தினை, குதிரைவாலி, சோளம் போன்றவற்றையே உண்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.