கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
இடுக்கி மாவட்டம் ராஜமலை – பெட்டிமுடி என்ற தேயிலை தோட்டத்தில் 20 வீடுகளில் வசித்த தமிழர்கள் 78 பேர், நிலச்சரிவு நிகழ்ந்து, உயிரோடு மண்ணில் புதையுண்டனர். இவர்களில் 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஏற்கனவே மீட்கப்பட்ட 26 சடலங்கள் இரு ராட்சத குழிகள் தோண்டி, நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இன்று மீட்கப்பட்ட 17 சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின், உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையில் 3-வது நாளாக நீடித்த மீட்பு பணியில், எஞ்சிய 24 பேரின் உடல்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பலியான தமிழர்களில் பெரும்பாலானோர் கயத்தாறு, தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் ராஜபாளையம் பகுதிகளை பூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் 3 தலைமுறைகளாக மூணாறில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.