ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்தது. மொத்தம் 17 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை பெற்றார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1,14,439 வாக்குகளை பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதனால், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த தேர்தலில், ஒரு கட்சி தன்னுடைய டெபாசிட்டை உறுதி செய்வதற்கு மொத்தம் 25,777 வாக்குகள் தேவையாக இருந்தன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி 23,810 வாக்குகளே பெற்றிருந்தன. இதனால், நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. இந்த தேர்தலில், நோட்டாவுக்கு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளன.