கான்பூர்
உ.பி யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி விகாஸ் துபேவை ஒரு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் வைத்து இன்று (ஜூலை 9) காலை கைது செய்தனர்.
கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி மூன்று எஸ்.ஐக்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவாகி விட்டான். அவனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர். விகாஸ் துபேவுக்கு தகவல் அளித்து வந்த எஸ்.ஐ க்கள் இருவரையும் புதனன்று கைது செய்தனர். 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் டில்லி சொகுசு ஓட்டலில் அவன் தங்கியிருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்நிலையில் இன்று காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார்.