பெரம்பலூர்
கோழிப் பண்ணைகளில் 2ஆயிரம் டன் பெரிய வெங்காயம் பதுக்கி வைத்திருந்ததாக வந்த தகவலின் பேரில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ60க்கும், தினசரி காய்கறி மார்க்கெட்டில் ரூ.80க்கும் விற்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வெளிமாநிலத்திலிருந்து பெரிய வெங்காயத்தை ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.25க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் பயன்பாடில்லாத கோழிப்பண்ணைகளை வாடகைக்கு எடுத்து வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும், வெங்காய தட்டுப்பாடு இருக்கும் போது வெங்காயத்தை கூடுதலாக விலைக்கு விற்பனை செய்ய வியாபாரிகள் திட்டமிட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில், தோட்டக்கலை துணை இயக்குநர் பாத்திமா தலைமையிலான அலுவலர்கள் இரூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் நேற்று அதிரடி ஆய்வு செய்தனர். அங்கு அடுக்கி வைப்பட்டு இருந்த வெங்காயத்தை சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகளிடம், எதற்காக வெங்காயத்தை வைத்துள்ளீர்கள் என கேட்டதற்கு, விதைக்காக வாங்கி வைத்துள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்படும். இது சட்ட விரோதமான செயல் என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்து சென்றனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை இணை இயக்குநர் கருணாநிதியிடம் கேட்டபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது பற்றி கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பதுக்கல் வெங்காயம் என தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை கூறியதாவது: பாஜக கட்சியை சேர்ந்த வெங்காய வியாபாரிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 8இடங்களில் பயன்பாடில்லாத கோழிப்பண்ணைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட பெரிய வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளனர். பொது மக்களின் அத்தியாவசிய உணவு பொருளான வெங்காயத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்