கடலுாரில், வங்க தேசத்தினர் தங்கியிருந்த வீட்டை மத்திய உளவுப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து, விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பம் கற்பக விநாயகர் நகரில் உள்ள ஒரு வீட்டை, நேற்று பகல், 1:00 மணியளவில் மத்திய உளவு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். அந்த வீட்டிற்குள் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள், 3 வயது சிறுவன் என ஆறு பேர் இருந்தனர். அவர்களிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியதோடு, வீடு முழுதும் சோதனையிட்டனர். தகவலறிந்த சுற்றுப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் போலீசார் வந்து, கூடியிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். வீட்டில் இருந்த ஆறு பேரையும், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், ஓராண்டாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளனர். ஹிந்தி மட்டுமே பேசும் அவர்கள் பற்றி அருகில் வசிப்பவர்களுக்கு விபரம் தெரியவில்லை. அவர்கள் வைத்திருந்த ஆதார் கார்டில் கோல்கட்டா விலாசம் உள்ளது.
அவர்களுக்கு அடிக்கடி சர்வதேச போன்கால் அழைப்பு வந்துள்ளது. அதன் காரணமாக மத்திய உளவு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு, அந்த எண் சிக்னலை வைத்து கடலுார் வந்து சுற்றிவளைத்து விசாரணை நடத்தியது தெரிந்தது.
மத்திய உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நபர்கள் யார்? ஏன் வெளிநாட்டிற்கு அடிக்கடி பேசினர் எதற்காக கடலுாரில் தங்கியுள்ளனர்? அவர்கள் உண்மையான பாஸ்போர்ட்டில் வந்தவர்களா, அவர்களுக்கு வீடு எடுத்து தங்க வைத்த நபர்கள் யார்? அவர்கள் யார், யாருடன் தொடர்பு வைத்திருந்தனர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.