Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிறசியில் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்ற ஆசிரியர்கள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிறசியில் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்ற ஆசிரியர்கள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக நடந்த பயிற்சி வகுப்பில் இருந்து ஆசிரியர்கள் பாதியில் வெளியேறுவதை தடுக்க பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிறசி வகுப்பு ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பானது காலை 9.30 மணி முதல் தொடங்கி மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வசதியாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பயிற்சி நடைபெற்றதை நேற்று மதியம் 12.30 மணிக்கு மேல் கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டு சென்றார். மதியம் 1 மணிக்கு மேல் உணவு இடைவேளை விடப்பட்டது.

மேலும் மதிய உணவு அங்கேயே பொட்டலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் பலர் உணவு பொட்டலங்களை வாங்கிவிட்டு வெளியே செல்ல முயன்றனர். மேலும் சிலரும் வெளியில் செல்ல முயன்றனர். இதனால் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. பயிற்சி வகுப்பில் இருந்து பாதியில் வெளியேறி செல்வதை தடுக்க நடவடிக்கையாக இதனை மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் நுழைவுவாயில் முன்பு தவித்தனர்.

இதற்கிடையில் சிலர் தங்களுக்கு வெளியில் சென்று உணவு சாப்பிட வேண்டும் நுழைவுவாயில் கதவை திறந்துவிடுங்கள் என கூறினர். மேலும் சிலர், மாணவர்களை விட கேவலமாக எங்களை நடத்துகின்றனர். நாங்கள் என்ன சிறை கைதிகளா?. எங்களை அடைத்து வைத்துள்ளீர்கள். வெளியில் சென்று வரக்கூடாதா? எனக்குமுறினர். மேலும் அங்கிருந்த வருவாய்த்துறை ஊழியர்களிடமும், பள்ளி நிர்வாகத்தினரிடமும் முறையிட்டனர்.

ஆனால் அவர்களோ, உணவு இடைவேளைக்குபின் மேலும் பயிற்சி ஒரு மணி நேரம் நடைபெறும். அதுவரை அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். பாதியில் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். இதனால் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதிகாரிகளின் வாகனங்கள் வெளியே செல்வதற்காக நுழைவு வாயில் திறக்கப்பட்ட போது அந்த இடைவெளியில் சிலர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சென்றனர்.

இதற்கிடையில் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வேறு வழியில்லாமல் பள்ளியின் பக்கவாட்டு சுவரில் ஏறி குதித்து தாண்டி வெளியே சென்றனர். இதில் ஆண் ஆசிரியர்களுக்கு இணையாக ஆசிரியைகளும் குதித்து வெளியில் சென்றனர். ஏதோ பெரும் விடுதலை பெற்றதை போல மதியத்திற்கு மேல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றாமல் நிம்மதியுடன் அவர்கள் சென்றதை காணமுடிந்தது.

அவ்வாறு சென்றவர்களில் சிலர் கூறுகையில், இந்த பயிற்சி ஏற்கனவே வழங்கப்பட்டது தான். அதனால் மதியத்திற்கு மேல் இருக்கத்தேவையில்லை. ஏற்கனவே எங்களுக்கு இந்த நடைமுறைகள் தெரியும் என்றனர். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வருகிற 3-ந் தேதி 2-ம் கட்ட மறுபயிற்சியும், வருகிற 5-ந் தேதி 3-ம் கட்ட பயிற்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments